Facebook: தணிக்கை அரசியலும் அதிகார நலன்களும்

வன்முறை, பயங்கரவாத்திற்கு எதிரான கரிசனை என்ற போர்வையில் இந்தத் தணிக்கை முன்னெடுக்கப்படுவது வேடிக்கையானதாகும். இங்குதான் Facebook-சமூக வலைத்தளத்தின் அரசியல் வெளிப்படுகின்றது. அது அதிகார நலன்களைச் சார்ந்து இயங்குகின்றது என்பதற்கு வேறு ஆதாரங்கள் தேவைப்படாது.

போர் அவலத்தின் குறியீடாக விளங்கும் வியட்னாம் சிறுமி உடலில் எரிகாயங்களுடன் நிர்வாணமாக ஓடும் காட்சியின் ஒளிப்படம் Facebook – முகநூல் நிர்வாகத்தினால் நீக்கப்பட்ட பின்னணியில், முகநூல் கடைப்பிடிக்கும் தணிக்கை அரசியல் அணுகுமுறை சார்ந்த விவாதங்கள், விமர்சனங்கள் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளன.

1972 ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தினரின் பிடியிலிருந்து உயிர் பிழைப்பதற்காக வியட்னாமி வீதியொன்றில் மரண பீதியுடன் சிறுவர்கள் ஓடுகின்ற காட்சியின் ஒளிப்படத்தில், குறிப்பாக அதில் 9 வயதுடைய Phuc Phan Thi என்ற வியட்னாமியச் சிறுமி உடைகளில் தீ பற்றவைக்கப்பட்டதால் வெறும்மேனியுடன் – எரிகாயங்களுடன் ஓடும் காட்சி அமெரிக்கப் படைகள் வியட்னாமிய மக்களுக்கு ஏற்படுத்திய அவலங்களின் குறியீடாக பார்க்கப்பட்டது. அந்த ஒளிப்படம் Associated Press செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த படப்பிடிப்பாளர் Nick Utஇனால் எடுக்கப்பட்டதாகும்

இது அமெரிக்க அடக்குமுறையின் குறியீடாகவும் அதேவேளை ஊடகங்களின் வலிமையை உலகறியச் செய்ததுமான படம். இது அரசியல் ரீதியான ஒரு குறியீட்டு அர்த்தம் கொண்டது. தவிர சிறுவர் துஸ்பிரயோகத்திற்கும் சிறுவர்களுக்கெதிரான அனைத்து வகை வன்முறைகளுக்கும் எதிரான விழிப்புணர்வுக்கு பயன்படுத்தக்கூடிய வலிமை இதற்கு உண்டு. இதன் குறியீட்டு அர்த்தம் பெறுமதி மிக்கது. மானிட அவலத்தின், ஆக்கிரமிப்புப் போர்க் கொடூரத்தின் நிலைத்த அடையாளங்களில் ஒன்று அப்படம். இதன் நீக்கம் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது.

நோர்வேயின் முதன்மை நாளிதழான ஆப்தன்போஸ்தன் (Aftenposten) இந்தப்படத்தினை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட போது முகநூல் நிர்வாகம் அதனை நீக்கியிருந்தது. தொடர்ந்து நோர்வேயின் தலைமை அமைச்சர் Erna Solberg தனது முகநூல் சுவரில் பதிவிட்டபோதும் நீக்கியுள்ளது. இவை 2016 செப்ரெம்பர் முதல் வாரத்தில் நடந்த சம்பவங்களாகும்.

இந்தப் போக்கு ஊடக சுதந்திரத்தினைக் கேள்விக்கு உள்ளாக்குவதோடு, வரலாற்று உண்மைகளை மூடிமறைக்கும் முனைப்பு என்ற கோணத்தில் ஆப்தன்போஸ்தன் நாளிதழின் பொறுப்பாசிரியர் Espen Egil Hansen முகநூல் நிறுவனர் Mark Zuckerberg இற்கு பகிரங்கக் கடிதமொன்றின் மூலம் கடுமையான எதிர்வினையை ஆற்றியிருந்தார். அந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் சர்வதேச நீதியில் முக்கியத்துவப்படுத்தப்பட்டது. முகநூல் நிர்வாகத்தை நோக்கிய பலத்த விமர்சனங்கள் எழுந்தன. பரவலாக விவாதத்தைத் தோற்றுவித்ததோடு அழுத்தத்திற்கும் அக்கடிதம் வழிகோலியது.

அந்த எதிர்வினைக்கு முதலில் பொதுவானதொரு சம்பிருதாயமான பதிலை வழங்கியது முகநூல். அதாவது வியட்னாம் சிறுமியின் படம் நிர்வாணப்படம் என்ற அடிப்படையில் நீக்கப்பட்டது. இவ்வாறான வரலாற்று ரீதியான குறியீட்டு அர்த்தமுளள படங்களையும் நிர்வாணப் படங்களையும் வேறுபடுத்தி அனுமதிக்கும் தொழில்நுட்பப் பொறிமுறையைத் தாம் கொண்டிருக்கவில்லை என்ற ரீதியில் அதன் முதற்கட்டப் பதில் அமைந்திருந்தது.

ஆப்தன்போஸ்தன் பொறுப்பாசிரியரின் காத்திரமான எதிர்வினையாற்றலுக்கு சர்வதேச ரீதியில் ஏற்பட்ட ஊடகக் கவனக்குவிப்பினால் முகநூல் தனது முடிவை மாற்றியமைக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. வியட்னாம் சிறுமியின் ஒளிப்படத்தினை போர் அவலக் குறியீட்டுப் படமாக ஏற்று அனுமதிப்பதாகக் கூறவைத்துள்ளது.

இந்தச் சிக்கலை ஆப்தன்போஸ்தன் நாளிதழ் கையிலெடுத்தமைக்கான பின்னணியைச் சற்று நோக்குதல் பொருத்தமானது. இந்தச் சம்பவத்திற்குச் சில வாரங்களுக்கு முன்னர் நோர்வேஜிய எழுத்தாளர் Tom Egeland போர் வரலாற்றை மாற்றியமைத்த 7 ஒளிப்படங்கள் என்ற தலைப்பில் தனது முகநூல் சுவரில் ஒரு பதிவினை இட்டார். அவற்றில் வியட்னாம் சிறுமி படம் நீக்கப்பட்டது. சிறுவர் போர்னோகிராபி (Child Pornography) என்ற வரையறையின் கீழ் அது நீக்கப்பட்டது. சிறுவர் போர்னோகிராபியையும் போர் அவலக் குறியீட்டினையும் பிரித்தறியாத வகையிலான விதிமுறைகளை அனுமதிப்பது வரலாற்றுத் திரிப்பிற்கு வழிகோலிவிடும். அது கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும் செயல் என்ற அடிப்படையில் ஆப்தன்போஸ்தன் இதற்கான எதிர்வினையை ஆற்றியதோடு, இதற்கு ஒரு சர்வதேச கவனத்தினையும் ஏற்படுத்திக் கொடுத்தது எனலாம்.

வியட்னாம் சிறுமியின் பட நீக்கம், அதற்கான சர்வதேச எதிர்வினைகளின் விளைவாக முகநூல் அதனை அனுமதிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட சமகாலத்தில் இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் முகநூல் நிர்வாகத்திற்குமிடையில் நடந்த உயர்மட்டச் சந்திப்பு பற்றிய செய்தி வெளிவந்திருக்கிறது. அந்தச் சந்திப்பில் ஒரு உடன்பாடும் எட்டப்பட்டது. அதாவது இஸ்ரேல் மீது வன்முறைகளைத் தூண்டும் பதிவுகளைத் தடுப்பது, நீக்குவது என்பதே அந்த இணக்கப்பாடு. அதாவது பலஸ்தீனத் தரப்பினைக் குறிவைத்து இந்த கருத்துத் தடுப்புச்சுவர் ஏற்படுத்தப்படுகின்றது என்பதை இலகுவில் எவரும் புரிந்து கொள்ள முடியும். இதனைப் புரிந்துகொள்ள ஆழமான அரசியல் அறிவேதும் தேவையில்லை.

இஸ்ரேல் நீதியமைச்சர் Ayelet Shaked, பாதுகாப்பு அமைச்சர் Gilad Erdan ஆகியோருக்கும் முகநூல் உயர்மட்டக்குழுவினருக்குமிடையில் பேச்சுக்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றைக் கண்காணிப்பதற்கு தனியான செயற்குழு அமைப்பது தொடர்பான இணக்கமும் எட்டப்பட்டுள்ளது.

பலஸ்தீன மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து, அவர்களை நிலமற்றவர்களாக்கி, படுகொலைகள், பொருளதார நெருக்குவாரங்களை ஏற்படுத்தி, 6 தசாப்தங்களுக்கு மேலாக அம்மக்கள் மீது அரச பயங்கரவாதத்தை ஏவிவிட்டுவந்துள்ள ஒரு அடக்குமுறை அரசுடன் முகநூல் செய்துள்ள உடன்படிக்கை என்பதாகவே இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Youtube-காணொலிகள், சமூக வலைத்தளங்கள் மூலம் பலஸ்தீனியர்கள் வன்முறைத் தாக்குதல்களுக்குத் தூண்டப்படுகின்றார்கள் என்கிறது இஸ்ரேல். இது பலஸ்தீனியர்களை மட்டும் குறிவைத்த செயற்பாடு அல்ல என்பதையும் புரிந்து கொள்ள முடியும். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பினையும் அரச பயங்கரவாதத்தினையும் எதிர்க்கும் அரபு, மற்றும் மத்திய கிழக்குப் பிராந்திய முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துருவாக்க அடக்குமுறையைக் குறிவைத்த இஸ்ரேலின் செயலுடன் கைகோர்க்கின்றது Facebook.

தமது அரசிற்கு எதிரான பதிவுகளை நீக்கக்கோரி, 2016 நடுப்பகுதியில 158 கோரிக்கைகள் இஸ்ரேலினால் YouTubeஇற்கும் 13 கோரிக்கைகள் Facebookஇற்கும் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 95 வீதமான கோரிக்கைகள் YouTubeஇனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பதிவுகள் நீக்கப்பட்டதாகவும், 80 வீதம் Facebookஇனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நீக்கப்பட்டதாகவும் இஸ்ரேலின் நிதியமைச்சர் Ayelet Shaked கூறியுள்ளார்.

இது மட்டுமல்ல. குர்திஸ்தான் (Kurdistan) என்ற சொல் Facebookஇனால் அதிகமாகத் தணிக்கைக்கு உட்பட்டிருப்பதாகவும், குர்திஸ்தான் சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள் இதற்கு எதிரான முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாகவும் அண்மையில் ஒரு தகவல் வெளியாகியிருந்தது. அது மட்டுமல்லாமல் குர்திஸ் மக்கள், போராளிகள் மீதான துருக்கிய அரச வன்முறைகளுக்கு எதிரான கருத்துகளும் தணிக்கைக்கு உள்ளாகி வருகின்றன. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட ஆவணங்கள், காணொளிகள், பாடல்கள், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படங்கள் முகநூல் மற்றும் Youtubeதளங்களிலிருந்து நீக்கப்படுகின்றமையும் இவற்றோடு இணைத்துப் பார்க்கப்படவேண்டியது.

வன்முறை, பயங்கரவாத்திற்கு எதிரான கரிசனை என்ற போர்வையில் இந்தத் தணிக்கை முன்னெடுக்கப்படுவது வேடிக்கையானதாகும். இங்குதான் Facebook-சமூக வலைத்தளத்தின் அரசியல் போக்கு வெளிப்படுகின்றது. அது அதிகார நலன்களைச் சார்ந்து இயங்குகின்றது என்பதற்கு வேறு ஆதாரங்கள் தேவைப்படாது.

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் சமூக வலைத்தளங்களின் வகிபாகம் மிகமிக முதன்மையான இடத்திற்கு வந்துள்ளது. சாதாரணமாக ஒரு குடும்பத்தின் கிட்டத்தட்ட எல்லா அங்கத்தவர்களும் Facebook பயன்படுத்துகின்றனர். பாவனைக்கான வயதெல்லை 13 என்ற விதி இருப்பினும் வயதுக்கட்டுப்பாட்டுக் கண்காணிப்பிற்குரிய பொறிமுறை இதுவரை நடைமுறையில் இல்லை. 13 வயதிற்குக் குறைந்தவர்கள் Facebook கணக்கு வைத்துள்ளனர்.

Facebook என்பது ஆழமான வாசிப்பிற்குரிய தளமாக, ஆரோக்கியமான சமூக அரசியல் விவாதங்களுக்குரிய முற்றுமுழுதான பயன்பாட்டுத் தளமாக உருவாகிவிட்டது என்று கூறமுடியாவிட்டாலும் ஆரோக்கியமான விவாதங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அதன் வகிபாகம் பெறுமதி மிக்கது என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.

அதிகமதிகம் நட்புகளை, குடும்ப உறவுகளை ஒருங்கிணைக்கின்ற, (நாடு கடந்து வாழும் குடும்ப உறவுகள், நட்புகளையும்) மற்றும் தனிப்பட்ட-குடும்ப-சமூக அமைப்புகளின் நிகழ்வுகள், செயற்பாடுகளின் ஒளிப்படங்கள், செய்திகள், தகவல்களைப் பகிர்கின்ற அளவிலேயே அதன் பயன்பாடு கூடுதலாக உள்ளது. தொலைத்த நட்புகளை, உறவுகளை மீட்டெடுத்துத் தந்துகொண்டிருப்பதில் அதன் பங்கு பெரியது. எனினும் சமூக, அரசியல், பண்பாட்டுக் கூறுகள் சார்ந்த கருத்துகள், விவாதங்களுக்குரிய தளமாகவும் சமூக வலைத்தளங்கள் விளங்குவதை மறுப்பதற்கில்லை.

Facebook என்பது ஒவ்வொரு தனிமனிதர்களும் நினைத்த நேரத்தில் கருத்துகளை, தமது தனிப்பட்ட நாளாந்த செயற்பாடுகள், பொழுதுபோக்குகள் உட்பட்ட இன்னபிற பயனற்றதும் பயனுள்ளதுமான பதிவுகள், தகவல்கள், படங்களைப் பகிர்கின்ற தளமாகவே அதிகமதிகம் பயன்படுத்தப்படுகின்றது. தகவல்களைப் பகிர்கின்ற, விவாதங்களை முன்னெடுக்கின்ற உலகப் பொதுத் தளமாக சமகாலத்தில் பெரும் சமூக வகிபாகத்தினைக் கொண்டிருக்கின்றது.

உலகின் மிகப்பெரிய ஊடகங்கள் கூட தமது செய்திகள், கட்டுரைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உட்பட்ட ஊடகச் செயற்பாட்டு விளைவுகளை பெருவாரியான வாசக-நேயர்களிடம் சேர்ப்பிப்பதற்கு Facebookஇனை அதிகம் பயன்படுத்துகின்றன, நம்பியிருக்கின்றன. இவ்வாறான யதார்த்தத்தில் தகவல் யுகத்தின் அதிகூடிய அதிகார வலுக் கொண்ட சமூக ஊடகமாக உள்ளது. இந்த அதிகாரத்தினை Facebook துஸ்பிரயோகம் செய்கின்றது என்ற கோணத்தில் சில விடயங்கள் ஆப்தன்போஸ்தன் பொறுப்பாசிரியரின் கடிதத்தில் Facebookஇற்குச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

பொதுவெளியில் சமூக ஊடகமாக விளிக்கப்பட்டாலும் ’Facebook – நிர்வாகம்’ அதனை ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக அல்லது தொழில்நுட்பத் தளமாகவே அடையாளப்படுத்துகிறது. ஊடக நிறுவனமாகவோ, வெளியீட்டுத் தளமாகவோ அல்ல.

தணிக்கை அரசியல் சார்ந்த ஊடக தர்மத்திற்கு அமைய, கருத்துச் சுதந்திரத்திற்கு அமைய மாற்றத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அழுத்தங்களும் அதிகரித்துள்ளன. வியட்னாம் சிறுமி பட நீக்கத்தை எதிர்த்து ஆப்தன்போஸ்தன் பொறுப்பாசிரியரின் பகிரங்கக் கடிதம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாகவே இந்தக் குரல்களைக் கேட்க முடிகிறது. தொடர்ச்சியாக இவ்வாறான காத்திரமான குரல்கள் ஒலித்த வண்ணம் இருக்கும் பட்சத்திலேயே அதிகார சக்திகளின் நலன்களுக்கு முண்டுகொடுக்கும் முகநூலின் போக்கில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

தினக்குரல், காக்கைச்சிறகினிலே, பொங்குதமிழ் இணையம்
ஒக்ரோபர் 2016

Leave A Reply