புதியவன் ராசையாவின் ‘ஒற்றைப் பனை மரம்’

புதியவன் ராசையாவின் ‘ஒற்றைப் பனை மரம்’ திரைப்படம் நேற்று ஒஸ்லோவில் சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது.
-‘ஒற்றைப் பனை மரம்’ பின்-முள்ளிவாய்க்கால் துயரத்தினைச் சித்தரிக்கிறது.
-முதல் 15 நிமிடங்கள் வரை முள்ளிவாய்க்கால் இறுதிக் கணங்களும், இராணுவத்தின் பிடிக்குள் மக்கள் கையறுநிலையில் செல்வதும், காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
– இதன் முதன்மைப் பாத்திரம் ‘புனர்வாழ்வு’ பெற்று விடுதலையாகும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் போராளி. அடுத்த மையப்பாத்திரம் மாற்று இயக்கம் ஒன்றைச் சேர்ந்த முன்னாள் போராளி.
– இரண்டு பாத்திரங்களும், ஆளுமையும் முதிர்ச்சியும் கொண்ட சித்தரிப்புகள்.
– இரண்டு மையப்பாத்திரங்களும் வெவ்வேறு போராட்ட இயக்கப் பின்னணிகளைக் கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் அவர்களுடைய அரசியல், சமூகப் பார்வை ஒருமித்ததாக இணைகின்றது. எதிர்காலத் தோழமைச் செயற்பாடுகளுக்குரிய நம்பிக்கையை இது பிரதிபலிக்கின்றது.
– முன்னாள் போராளிகள் சமூகத்தால் எப்படி எதிர்கொள்ளப்படுகின்றனர் என்பதைப் பேசுகின்றது.
– பெண்களுக்கெதிரான வன்முன்முறைகளை, வாழ்வியல் நெருக்கடிகளைப் பெண்களே தலைமைதாங்கிப் பேசவேண்டும்- போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்கிறது.
– போர் முடிவுக்கு வந்த பத்து ஆண்டுகளை நெருங்கியும் அரச பயங்கரவாதம் பலமுனைகளிலும் தமிழ் மக்களின் குரல்வளையை நெரித்துக்கொண்டிருக்கின்றது, அரசியல் உரிமைகளை நசுக்கிக்கொண்டிருக்கின்றது என்பதைக் காத்திரமாகப் பேசுகின்றது.
– ஈழத்தமிழர்களின் சமூக, அரசியல், உரிமைப் போராட்ட முன்னெடுப்புகளுக்கான ஒரு தோழமையுடனான கூட்டுக்குரலைக் கண்டடைய வேண்டிய தேவையை வேண்டிநிற்கின்றது.
-அத்தகைய கோருகை என்பது முதிர்ச்சியும் பொறுப்பும் மிக்க நல்லெண்ண அணுகுமுறையெனத் தோன்றுகிறது.
– தமிழ்ச் சமூக அக முரண்பாடுகளை, அதன் பிற்போக்கு அம்சங்களை கேள்விகேட்கின்றது. விமர்சிக்கின்றது.
– விடுதலைப்போராட்டத்தின் கடந்தகாலம் சார்ந்த சில விடயங்கள் மிகைப்படுத்தல் அல்லது ஒற்றைப்பரிமாண அணுகுமுறையோடு சித்தரிக்கப்பட்டுள்ளன.
– வேறு சில சமகாலச் சம்பவ உள்ளீடுகள் கதையின் மைய ஓட்டத்தோடு ஒட்டாத வகையில் இடையூறாக அமைந்துள்ளன. அவை விமர்சனத்திற்குரியன.
– திரைப்பட தொழில்நுட்ப அம்சங்களில் நேர்த்தியைக் கொண்டிருக்கின்றது. அஸ்வமித்ராவின் பின்னணி இசை காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.
விரிவாகப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்.

Leave A Reply